பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கு 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் பார்வையிட்டு குறைபாடுகள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க நான்கு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. புகார்கள் எதுவும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிவிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 25-இல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஜூன் 27-ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், ஜூன் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 வரை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment