TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரியும் 1500 ஆசிரியர்களின் குடும்பங்களை காப்பாற்றிடுக. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவான வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :


  கடந்த ஜுன் மாதம் 8, 9 தேதிகளில் முறையே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடந்தது.அதன்  முடிவு  22.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளின்  முடிவு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.   இடைநிலை ஆசிரியர் (தாள் - 1) க்கு 1,62,314 பேர்கள் தேர்வு எழுதியதில்  482 பேர் மட்டுமே தேர்ச்சியும், பட்டதாரி ஆசிரியர் (தாள் - 2) 3,79,343 பேர் எழுதியதில்  342 தேர்வாளர்கள் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள். இவ்வளவு பேர் தோல்வியினைத் தழுவ முக்கிய காரணம் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இணையதளத்தில் வெளியிடப்பட்ட பாடத்திட்டங்களுக்கும் தேர்வுக்கு கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கும் அதிக முரண்பாடே. நேற்றைக்கு மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அளித்த பேட்டியில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டத்தில் வினாக்கள் எடுக்கச் சொன்னால் அவர்கள் புதிய பாடத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புக்குரிய பாடத்திட்டத்தில் வினாக்கள் தயாரிக்கப்பட்டுவிட்டது என்றார். ஆகவே,மறு தேர்வு நடத்திட .வேண்டும்.மேலும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கும் 60,000 பேர்களில் காலிப்பணியிடங்களுக்கேற்ப பணி வழங்கிட வேண்டும்.குறிப்பாக, அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரிந்துவரும் 1500 ஆசிரியர்கள் மட்டுமின்றி அவர்களின்  குடும்பங்களில் இடி விழுந்து மீளா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 9000 க்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்.ஆனால் அரசு பல்வேறு காரணங்களால்  கடந்த 5  ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே தேர்வு நடத்தியது.அதனால்  ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு  அரசு அறிவித்தது போல முறையாக ஆண்டுக்கு இருமுறை அப்போதே தேர்வு நடத்தியிருந்தால் இன்றைக்கு 1500 ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.  தற்போது நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்  தேர்வில் தேர்ச்சிப்பெறாததால்  பணித்தொடர்வது மட்டுமில்லாமல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் சார்ந்த குடும்பங்களும் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளது.மேலும் தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என ஒவ்வொரு பாடத்திலும் தனித்தன்மையாக. விளங்கி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றித்தந்த ஆசிரியர்களுக்கு அவர்தம் பாடத்தில் தேர்வு நடத்தியிருந்தால் 100% வெற்றிப்பெற்றிருப்பார்கள். ஆனால் 8 ஆண்டுகள் தமிழ் பாடம் நடத்தியவர்கள் திடிரென்று அனைத்து பாடங்களையும் எழுதசொல்வது ஏற்புடையதாகாது.மேலும், தமிழ், உளவியல், பொது அறிவு என பாடங்களுக்கு தலா 30  மதிப்பெண்களும் சமூக அறிவியல் பாடத்திற்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் அடிப்படையில் கேள்வித்தாள் அமைந்திருந்தது. முதன்மை பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணக்கு , அறிவியல்  பாடங்களுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கிவிட்டு சமூக அறிவியலுக்கு மட்டும் 60 மதிப்பெண்கள் என கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதனால் தம் பாடத்தில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு அனைத்துப்பாடங்களுக்கும் தேர்வு எழுதுவது சிரமமே.உதாரணமாக 8 ஆண்டுகளாக தமிழ் பாடம் எடுத்தவர் சமூக அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்கள் எடுப்பது எப்படி சாத்தியமாகும். வினாத்தாள் அமைப்பு முறையே தவறாக உள்ளதால் தேர்ச்சிப்பெற முடியவில்லை.இருப்பினும் ஆசிரியர் பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில்  பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து சிறுபான்மை பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் இதே போன்று பணிபுரிந்து வந்தவர்களுக்கு 15 நாட்கள்  புத்தாக்கப் பயிற்சி அளித்து பணி தொடர செய்தது போல அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத 1500 ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சியளித்து கருணை அடிப்படையில்  பணித் தொடர வாய்ப்பு வழங்கிடும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
 பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment