ஒரு சிலரின் தவறான செய்கையால் ஆசிரியர் சமுதாயமே தலைகுனியவேண்டியுள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது படிப்பதற்கும் நல்லப்பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வதில் மட்டும் திருப்தியடைந்துவிடவில்லை. மாறாக குழந்தைகள் பாதுகாப்பாக திரும்பிவருவார்கள் என்று நம்புவது ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மட்டுந்தான். அதனை கெடுப்பதற்காகவே சில தரங்கெட்டவர்களால் ஆசிரியரின் புனிதம் கெட்டுப்போகிறது.
சென்னை, கோவை,தற்போது கரூர் என பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.வெளியே வராதது ? சுயஒழுக்கம் குறைந்துபோனதற்கு வன்புணர்ச்சி தூண்டும் வலைதளம், விளம்பரம் திரைப்படம் காரணமாக ஒருபுறம் இருந்தாலும் அடிப்படை காரணம் கல்வியென்றால் மிகையாகாது. கூட்டுகுடும்பம் சீர்குலைந்து தனிக்குடித்தனம் பெருகியதும் எனலாம். இனிவரும் காலத்தில் இதுபோன்று தவறுகள் நடக்காவண்ணம் தடுப்பது அனைவரின் பொறுப்பு.முதற்கட்டமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நன்னெறி கல்வியினை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். வட்டாரக்கல்வி அளவில் மாநிலம் முழுவதும் மனஉளவியல் நிபுணர்கள் நியமனம் செய்யப்பரிசீலிக்கவேண்டும்
பாலியல் தொடர்பானச் செயலில் ஈடுபடுவோர் எந்தப்பள்ளியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் பணிநீக்கம் செய்வதோடு அவரின் கல்விச்சான்றிதழ்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பதுதான் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும். தனியார் பள்ளி நிருவாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கிறார்களே தவிர மாணவர்களின் நலனை கருத்தில் கொள்வதில்லை.இதனால் வேலியே பயிரை மேயும் இழிவுசெயல் அரங்கேறுகிறது.அரசுப்பள்ளிகளை கண்காணிப்பது போல தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளும் மாணவர்களின் நலனும் தொடர்கண்காணிப்பு அவசியம்.அரசு கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்களும் தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கத்தவறும் நிருவாகத்தினால் மனஉளைச்சலால் உயிரிழப்பு வேதனையளிக்கிறது
எனவே எதிர்காலத்தில் தவறுகள் நடக்காவண்ணம் இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்ளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment