மாணவர்களை
Zoom செயலினை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிடுக.தமிழ்நாடு ஆசிரியார் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. தினக்கூலித்தொழிலாளிகள் தினம்தினம் மன உளைச்சலிலேயே உள்ளார்கள்.இதனால் ஏழை,எளியோர் தங்களின் வாழ்வாதாரத்தினை இழந்து எப்போது கொரோனா முடிவுக்கு வரும் வாழ்க்கை மேம்படும் என கேள்விக் குறியாகவே வாழ்ந்து வருகிறார்கள். வெளியில் வரமுடியாததால் பத்துக்கு பத்து இடவசதிகொண்ட வீடுகளிலேயே முடங்கிப் போயுள்ளார்கள்.இந்நிலையில் 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படும் என்று கூறி மாணவர்களைத் தொடர்புகொண்டு Zoom செயலியை பதிவிறக்கம் செய் என்று கட்டாயப்படுத்து கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்கள் பெற்றோர்களை தொந்தரவுசெய்கிறார்கள். பெற்றோர்கள் இயலைமையை எண்ணி ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் எப்படி வாங்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகள் வரவேற்புக்குரியது அதேசமயம் அதனை செயல் படுத்தும் வசதிகளை ஆராயவேண்டும்.
வரும் அழைப்பை ஏற்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் மொபைல் போன் வைத்திருக்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை எப்படி எதிர் கொள்வார்கள்?
மேலும் Zoom செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பயன்படுத்தகூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் Zoom செயலி மூலம் வகுப்புகள் நடத்தி அதில் தவறான படங்கள் வெளிபட்டு தொடர்பிலிருந்த அனைவரும் பார்க்கநேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுளால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் Zoom செயலியை தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
மேலும், வேலையிழந்து நிற்கும் நடுத்தர வர்க்கம், தினக்கூலி வேலைசெய்வோர் தங்கள் குழந்தைக்கு லேப்டாப், ஹெட்செட், வாங்கிக் கொடுத்து தனியறை என்பதே அறியாதவர்கள் அதிவேக இணைய இணைப்புடன் ஆன்லைன் வகுப்பை கவனிக்க வசதி செய்து கொடுப்பது சாத்தியமா?
இந்த வாய்ப்பு பெற்ற குழந்தைகள், வாய்ப்பில்லாத குழந்தைகளின் நிலை? சம வாய்ப்பு மறுக்கப்படுமே. இந்த சிக்கல்களாலும் பொருளாதார காரணங்களாலும் இடை நிற்றல் அதிகரிக்கலாம். ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கவேண்டாம்.
கல்வி தொடர்புவிட்டுவிடாமல் இருக்க தற்போது அரசு கல்வி டிவி, பொதிகை சேனல்களில் ஒளிபரப்புவதுபோல அனைத்து முதன்மை தொலைக்காட்சிகளிலும் தினம் ஒரு மணி நேரம் மாறுபட்ட நேரங்களில் கல்விக்காக ஒதுக்கி பாடம் நடத்தினால் பாதிப்பில்லாமல் கல்விகற்க முடியும். ஆகையால் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்தி பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்தியும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை தினம் ஒரு மணிநேரம் 10 ஆம் வகுப்பு பாடம் ஓளிபரப்பு செய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment